பிரியாணி சாப்பிடுவதால் ஆண்களின் ஆண்மை குறைவதாக மாஜி அமைச்சர் பகீர் கிளப்பி உள்ளார் பிரியாணி சாப்பிடுவதால், ஆண்களின் செக்ஸ் உணர்வு குறைவதாகவும், அதில் என்ன மசாலா பொருட்கள் சேர்க்கிறார்கள் என்றே தெரியவில்லை என குற்றஞ்சாட்டிய மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சர் ரபிந்திர நாத் கோஷ், அங்கு இரண்டு கடைகளை மூடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு கூச் பெஹர் மாவட்டத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரபிந்திர நாத் கோஷ் அங்குள்ள சில பிரியாணி கடைகளை மூடும்படி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:
இங்கு பிரியாணி தயாரிக்க பயன்படும் மசாலா பொருட்கள் ஆண்களின் செக்ஸ் ஆர்வத்தை குறைப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பீகார், உத்தர பிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்தப் பகுதியில் பிரியாணி கடைகளை வைத்துள்ளனர். கடைகளை நடத்த உரிய உரிமம் அவர்களிடமில்லை.

இங்குள்ள பிரியாணி சாப்பிட்டதால் தங்களின் செக்ஸ் உணர்வு பாதிக்கப்பட்டதாகவும், என்ன மசாலா பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் என்றே தெரியவில்லை எனவும் இப்பகுதியில் உள்ள ஆண்கள் கடந்த சில நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த புகார்களை அடுத்து இந்தக் கடைகளுக்கு வந்து ஆய்வு நடத்தினோம். ஆனால், பிரியாணி கடையை நடத்துவதற்கான உரிமம் இல்லை. எனவே இந்த கடைகளை மூடியிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.