பொதுத் துறை வங்கிகளின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் கடன் கொடுக்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவு என்பதைக் கொண்டாடும் வகையில் ’அமிர்த மகோத்சவம்’ என்ற பெயரில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று (ஜூன் 8) அனைத்து பொதுத்துறை நிறுவனங்களால் மாபெரும் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு கடன் வசதி தொடர்பான அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், பல்வேறு அரசு திட்டங்களில் சேர்வது தொடர்பாகவும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் இன்று நடத்தப்பட்டன. கடனுதவிகள் பொதுமக்களுக்கு சென்று சேருவதை மையமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாவட்ட அளவிலான திட்டங்கள், அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது.

ஜூன் 6 முதல் 12 வரை நடைபெறும் நிதியமைச்சகத்தின் ’ஐகானிக்’ வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் விடுதலையின் அமிர்த மகோத்சவக் கொண்டாட்டத்தை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதை இதுபோன்ற மாவட்ட அளவிலான திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.